தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை
உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை
மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது
பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது
காலப்போக்கில் உதரம்(வயிறு) சற்றே பருத்து
அயலவர்க்கு அடையாளம் காட்டியது
முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது
மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது
முருங்கைக் கீரை சத்துணவானது
எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது
இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில்
குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது
என் தந்தை என்னே தாய்மை என்றார்
எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில்
நாட்கள் எண்ணும் வேளை தன்னில்
இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க
அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய்
கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று
மருத்துவிச்சி உதவியுடன் மகவு நான் வந்த போது
மட்டில்லா மகிழ்வு கொண்டு மகனாக் வந்துதித்தேன்
என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள்
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்றார் அப்பா
உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாடி ..
அம்மாவின் அமுதம் சுவைத்து
மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ
அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக
ஒவ்வாத உணவுகளை விலக்கி வைத்தாள்
மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி
பாற் பல்லு முளைத்தும் குறும்பன் நான்
குறும்பு செய்ய ..தடை போடாள்
வேப்பென்னையுடன் .
.பல் வேறு உணவுகளும் பழக்கிய பின்
தவனம் தீரவில்லைஉறங்க அணைக்கையிலே
பால் குடி மறக்க வைக்க பாட்டி துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே ...இன்றைய அவசர் உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது
பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....
குறிப்பு....
.மாந்தம் ..(ஒருவகை வயிற் றோட்டம்)
மருத்துவிச்சி ....மருத்துவமாது ..(.இவரால்
முடியாவிடால் தான் மருத்துவர் , வருவார். )
தவனம்....ஒருவகைத்தாகம் .